குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மறுமை வெற்றிக்கு வழி என்பதை (சிலரைத் தவிர்த்து மற்ற) அனைவரும் ஏற்றுள்ளோம், பலவீனமான செய்திகளை நாம் ஏற்பதில்லை, இப்படியிருக்கையில் குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கம் என்பதை விளங்கிய சிலர் பலவீனமான செய்திகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவதையும், பரப்புவதையும், ஆதரிப்பதையும் பரவலாகக் காணக் கூடிய ஒன்றாக உள்ளது. அனைத்து செய்திகளும் அனைவருக்கும் தெரியாது என்றிருந்தாலும் பலரும் அறிந்த பலவீனமான செய்திகளை இவர்கள் அறியாததன் விளைவே இது. எனவே பலவீனமான செய்திகளை அறியத்தரும் என்னால் இயன்ற சிறு முயற்சியாகபலவீனமான செய்திகள் என்ற பிரிவில் இத்தளத்தில் ஆக்கங்கள் இடம்பெறும். இன்ஷா அல்லாஹ்…
ரஜப் மாத துஆ (?):
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، أنا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ الْمُؤَمَّلِ، نا الْفَضْلُ بْنُ مُحَمَّدٍ الشَّعْرَانِيُّ، نا الْقَوَارِيرِيُّ، نا زَائِدَةُ نا زِيَادٌ النُّمَيْرِيُّ عَنْ أَنَسٍ، قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ ، قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ ، وَشَعْبَانَ ، وَبَلِّغْنَا رَمَضَانَ
ﺷﻌﺐ ﺍﻹﻳﻤﺎﻥ ﻟﻠﺒﻴﻬﻘﻲ 3523
நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தை அடைந்தால், “அல்லாஹம்ம பாரிக் லனா பீ ரஜப் வ ஷஃபான் வபல்லிக்னா ரமலான்” (யா அல்லாஹ்! ரஜப், ஷஃபான் மாதத்தில் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக, இன்னும் ரமலானை எங்களை அடையச் செய்வாயாக!) என்று பிரார்த்திப்பார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: பைஹகீ / ஷுஅபுல் ஈமான் 3523
இதே செய்தி தப்ரானி / அல்முஃஜமுல் அவ்ஸத் (4070) & அத்துஆ (838)ஆகிய ஹதீஸ் நூல்களிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதல்ல. இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் ஸாயிதா பின் அபிர்ருகாத் மற்றும் ஸியாத் பின் அப்துல்லாஹ் நுமைரி ஆகிய இருவரும் ஏற்கத்தக்கவர்கள் அல்லர். இருவருமே பலவீனமானவர்கள். எனவே இச்செய்தியை ஏற்க இயலாது.